பிற்காப்பு இல்லம் நடத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டுதல் 2015-இன் படி, இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்கள், சிறப்பு இல்லங்களின் பராமரிப்பில் தங்கி படிக்கும் குழந்தைகளில், பெற்றோர்கள் அல்லாத ஆதரவற்ற நிலையிலுள்ள குழந்தைகளின் வயது பதினெட்டு நிறைவடையும் போது, அவர்கள் தொடர்ந்து இல்லங்களின் பராமரிப்பு சூழ்நிலையில் இல்லாமல், சுதந்திரமான குடும்ப, சமூக சூழலில் இருந்து மேற்கல்வியை தொடர ஏதுவாக பிற்காப்பு பராமரிப்பு இல்லம் நடத்த தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
5 ஆண்டுகள் இல்லங்கள் நடத்திய முன் அனுபவம் மற்றும் குழந்தைகள் தொழிற்பயிற்சி பெற உதவிடும் வகையில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியபின் இல்ல வாசிகளை (குழந்தைகளை) பணி மற்றும் தொழில் பழகுநர்களாக அமர்த்துவதில் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். ஆலோசனைக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து பிற்காப்பு இல்லம் நடத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூகப் பாதுகாப்புத் துறை, ஆட்சியரகம் தருமபுரி என்கிற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், விவரங்களுக்கு 04342 - 232234 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.