தொண்டர்களை மட்டுமே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நம்பியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் ஜகூறியது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விலகி, திமுகவில் இணைவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அவரது முடிவுகள் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை அவர் திமுகவில் இணைந்தால் அது துரதிஷ்டவசமானது.
கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று திமுகவில் இணைந்த மூத்த நிர்வாகிகள் நிலை தற்போது என்னவென்று நினைத்துப் பார்க்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது கட்சித் தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ளது. எனவே, அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் என்றார் பழனியப்பன்.