தருமபுரியில் வியாழக்கிழமை சிறுபான்மையின பயனாளிகள் 29 பேருக்கு ரூ.2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாநில சிறுபான்மை ஆணையக் குழுத் தலைவர் எம்.பிரகாஷ் தலைமையில், சிறுபான்மையினர் நலம் சார்ந்த கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்து கேட்கும் கூட்டம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில், பயனாளிகள் 29 பேருக்கு பிற்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆணையத் தலைவர் எம்.பிரகாஷ் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வு விரைவாக எடுக்கப்படும். நல வாரியம் மூலம் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அடக்கம் செய்ய இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.சையத் காமில் சாஹிப், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரகமதுல்லா கான், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு தலைமை ஹாஜி பசுலே கரீம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.