தருமபுரி நகரம் மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அகற்றினர்.
தருமபுரி நகர், புறநகர் பேருந்து நிலையத்தில், நடைபாதை மற்றும் பேருந்து நிற்கும் இடங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், அனுமதியின்றி நிறுத்தப்படும், இருசக்கர வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து புகார்கள் மாவட்டக் காவல் துறைக்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து பாதிப்புகளை தடுக்கும் வகையில், இரண்டு பேருந்து நிலையத்திலும், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள், அங்கிருந்த பொருள்களை போலீஸார் அகற்றினர்.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 60 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், போலீஸார் கருணாநிதி உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.