தருமபுரி மாவட்டத்தில் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு, ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தருமபுரி பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மற்றும் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை சங்கத்தின் மாவட்டத் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில பிரசார செயலர் சுகமதி ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் ஜான் ஜோசப் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தின் நிறைவில், கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க உத்தரவிட்ட பிறகும், தருமபுரி மாவட்ட நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு இதுவரை அவ்வாறு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வைப்புநிதியை அவரவர் கணக்கில் தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருள்களை நியாய விலைக் கடைகளுக்கு அதிகளவில் விநியோகம் செய்யக் கூடாது.
மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வரும் டிச. 7-ஆம் தேதி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.