நடைபெறவுள்ள தேர்தல்களை எதிர்கொள்வது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் பாமக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக பாமக நிர்வாகிகள், உழவர் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோருடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல், 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் அல்லது உள்ளாட்சித் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும் போட்டியிடுவதற்குத் தயார் நிலையில் இருப்பது குறித்து அவர் கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
கூட்டத்தில், பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி, பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாநிலப் பொருளாளர் திலகபாமா, அமைப்புச் செயலர் செல்வகுமார், மாவட்டச் செயலர்கள் இமயவர்மன், சண்முகம், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (நவ.18) இதுபோன்ற ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.