தருமபுரி மாவட்ட அளவில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் எம்.திருநீலகண்டன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நேரு யுவகேந்திரா சார்பில் நாட்டுப்பற்றும் மற்றும் தேச கட்டமைப்பு தலைப்பில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 18 முதல் 29 வயதுக்குள்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். ஆங்கில மொழியில் மட்டுமே போட்டியானது நடத்தப்பபடும்.
மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 5,000, ரூ. 2,000, ரூ. 1,000, மாநில அளவில் ரூ. 25,000, ரூ. 10,000, ரூ. 5,000 வழங்கப்படும்.
அதேபோல, தேசிய அளவிலான போட்டிக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 50 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து மார்பளவு புகைப்படம் இணைத்து, பிறந்த தேதி, இருப்பிடச் சான்றிதழுடன் நவம்பர் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு 04342-233820 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.