காரிமங்கலம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் சார்- பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் டி.எஸ்.பி. சுப்பிரமணி, ஆய்வாளர் மஞ்சுளா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர், நான்கு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் காரிமங்கலம் சார் -பதிவாளர் (பொறுப்பு) அருட்பெருஞ்ஜோதியிடம் இருந்து ரூ.33,260 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தரகர்களாகச் செயல்பட்ட சேகர் என்பவரிடமிருந்து ரூ.8,920, பிரகாஷ் என்பவரிடமிருந்து ரூ.5,600 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.