பாப்பாரப்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் அனைத்தும் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் பள்ளி மாணவ - மாணவியர், வெளியூர் பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி தமிழக அரசு சார்பில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் இருசக்கர வாகன நிறுத்துமிடம், பொது சுகாதார வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணியகள் நிழற்கூடம், குடிநீர் குழாய் போன்ற வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் என நாளொன்றுக்கு 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்துக்குள் வராமல், வெளியிலேயே பேருந்துகள் நின்று செல்லுவதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர். மேலும், பெரும்பாலான பயணிகள் பேருந்துக்காக பாலக்கோடு - பென்னாகரம் செல்லும் பிரதான சாலையில் மழை, வெயிலில் காத்திருக்கும் அவல நிலையும் உள்ளது.எனவே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அனைத்தும் வந்துசெல்ல வேண்டும் எனவும், அதற்கென உரிய இடங்களில் நிறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.