கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் 12 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நியாயவிலைக் கடைகளைத் தனித்துறையின் கீழ் இயக்க வேண்டும், பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர் சங்கத்தினர் கடந்த திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி
வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமும் நடத்தினர். தொடர்ச்சியாக, புதன்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர். நியாயவிலைக் கடைப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. தனசேகரன் தலைமை வகித்தார். அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பிரசாரச் செயலர் எஸ். சுகமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலுக்குப் புறப்பட்ட அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற 12 பெண்கள் உள்பட 62 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.