மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு அஞ்சல் உறைக்கான ஓவியத்தை பொதுமக்களும் வரைந்து அனுப்பும் வகையில் நடத்தப்படும் ஓவியப் போட்டியில் தருமபுரியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சார்பில் வரும் அக். 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சேலம்பெக்ஸ் 2018 என்ற விழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில், அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தியிந் 150ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படவுள்ளது.
இதில் இடம்பெறும் ஓவியத்துக்கான தலைப்பு- தமிழகத்தில் காந்தியடிகளும், சுதந்திரப் போராட்டமும்.
தமிழகத்திலுள்ள எல்லா வயதினரும் இப்போட்டியில் பங்கேற்று ஓவியங்களை வரைந்து அனுப்பி வைக்கலாம். வாட்டர் கலர், ஸ்கெட்ச், பெயிண்ட் வகையான ஓவியங்களில் ஏதாவது ஒரு வகையில் ஏ4 அளவுள்ள தாள் அல்லது அட்டையிலோ வரையலாம்.
படத்துக்குக் கீழே அதனை வரைந்தவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்ணைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வரைந்த ஓவியத்தை வரும் செப். 22ஆம் தேதிக்குள், பி. ஆறுமுகம், சேலம்பெக்ஸ் விழாவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கோவை- 641002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டியில் வெல்வோருக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும்.