வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி அளித்த புகாரின் பேரில், அவரது கணவரான அரசுப் பள்ளி ஆசிரியர் உள்பட இருவரை தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தருமபுரியை அடுத்த மாதேமங்கலத்தைச் சேர்ந்தவர் விமல்ஆனந்த் (30), பென்னாகரத்தை அடுத்த ரங்காபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தருமபுரியை அடுத்த குப்பூர் பகுதியைச் சேர்ந்த சோனா (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சோனா புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது கணவர் விமல் ஆனந்த்தும், அவரது குடும்பத்தினரும் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். சோனாவுக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் தலையிட்டு ஆதரவு தெரிவித்து, வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து புகார் குறித்து விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விமல்ஆனந்த், அவரது தாய் மாரியம்மாள் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.