அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சித்தேரி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை, அரூர் ஆகிய அரசு மருத்துவமனை வளாகங்களில் இருந்து 108 அவசர ஊர்திகள் இயக்கப்படுகின்றன.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இயக்கப்படும் எட்டு வாகனங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 108 அவசர ஊர்தி வாகனங்கள் அடிக்கடி பழுதாகி பாதியில் நின்று விடுகிறது. இந்த நிலையில், சித்தேரி மற்றும் கோட்டப்பட்டியில் இருந்து இயக்கப்படும் 108 அவசர ஊர்தி வாகனங்கள் கடந்த 15 தினங்களாக பழுதாகியுள்ளது.
இதனால், விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இயக்கப்படும் 108 அவசர ஊர்தி வாகனங்களை சீரமைத்து இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.