தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பதிப்பாளர் மற்றும் படைப்பாளர் சங்கம் என்ற புதிய அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு, வாசிப்பை நேசிப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி. சரவணன் தலைமை வகித்தார்.
தகடூர்ப் புத்தகப் பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன், திருவள்ளுவர் பொத்தக இல்லத்தின் இயக்குநர் அறிவுடைநம்பி மற்றும் நாகை பாலு, கோ. மலர்வண்ணன், தகடூர்த் தமிழ்க்கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சங்கத்தைத் தொடங்குவது என்றும், அதற்கு ஒருங்கிணைப்பாளராக நூலகர் சி. சரவணன் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அனைத்து இலக்கிய அமைப்புகளையும், தமிழ்ச்சங்கங்களையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து கூட்டங்களை நடத்தவும், அரூர், பென்னாகரம், கிருஷ்ணகிரியில் தனித்தனியே கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவது, நவம்பரில் இளம் படைப்பாளர்களுக்கான கவிதை, சிறுகதை பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்டப் படைப்புகளை இணையதளம் மூலம் ஆவணப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.முடிவில் நூலகர் தீ. சண்முகம் நன்றி கூறினார்.