அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டி தார்ச் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் - எச். தொட்டம்பட்டி தார்ச்சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்தச் சாலையை பச்சினாம்பட்டி, நம்பிப்பட்டி, கொளகம்பட்டி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலையில் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரிப் பேருந்துகள், அரசு நகரப் பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், எச்.தொட்டம்பட்டி சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், விவசாய விளை பொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், டிராக்டர், லாரி ஓட்டுநர்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, அரூர் - எச்.தொட்டம்பட்டி செல்லும் தார்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.