அரூரை அடுத்த தீர்த்தமலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க.வினர் கோயில் குளத்தை தூய்மை செய்யும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தீர்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான பெரிய குளம் அரூர் - தீர்த்தமலை சாலையில், தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் எதிரில் அமைந்துள்ளது.
இந்த குளமானது பிளாஸ்டிக் குப்பைகள் அடைந்து பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதையடுத்து, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தக் குளத்தினை பா.ஜ.க.வினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் கோயில் குளத்தை தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பா.ஜ.க. பொருளாதார பிரிவு சார்பில் இந்த தூய்மைப் பணிக்கு அதன் மாவட்டத் தலைவர் டி.ஆர் (எ) ராஜேந்திரன் தலைமை வகித்தார். தூய்மைப் பணிகளை பாஜக கோட்டப் பொறுப்பாளர் ஜி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். இதில், கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் பெ.வேடியப்பன், மாவட்ட பொதுச்செயலர்கள் எஸ்.ஆர்.அழகு, சிவன், செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.