சித்திரை பெளர்ணமி: அதியமான், ஒளவையார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
சித்திரை பெளர்ணமியையொட்டி, தருமபுரி வள்ளல் அதியமான்கோட்டத்தில் உள்ள அதியமான் மற்றும் ஒளவையார் சிலைகளுக்கு ஆட்சியர் சு. மலர்விழி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நினைவை போற்றும் வகையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதியமான் கோட்டம் கட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக அரசின் உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு முதல் சித்திரை பெளர்ணமி நாளன்று அதியமானுக்கு விழா எடுக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு சித்திரை பெளர்ணமி அன்று, கோட்ட வளாகத்தில் உள்ள அதியமான் மற்றும் ஒளவையார் உருவச் சிலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மு. பாரதிதாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு. ஜனார்த்தனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.