ஒகேனக்கல் பகுதியில் மதுப்புட்டிகளை கடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்து, 30 க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் அரசு மதுபானக்கடை இல்லாததால், வாகனம் மூலம் மதுப்புட்டிகள் கொண்டு வரப்பட்டு பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திங்கள்கிழமை இரவு ஒகேனக்கல் - ஊட்டமலை சாலையில் வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 30-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகள் இருப்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில், ஒகேனக்கல் அடுத்த சத்திரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலகிருஷ்ணன் (22) என்பவர், ஒகேனக்கல் பகுதியில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.