அரூரை அடுத்த சுண்டாங்கிப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், செட்ரப்பட்டி ஊராட்சிக்குள்பட்டது பெரியார் நினைவு சமத்துவபுரம். இந்த சமத்துவபுரத்தில் 100 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர சுண்டாங்கிப்பட்டியில் இருந்தும் குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வறட்சியின் காரணமாகவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு குறைவாக இருப்பதாலும் சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லையாம். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில், சுண்டாங்கிப்பட்டி சமத்துவபுரத்துக்கு கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.