தருமபுரியில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்களவை முன்னாள் உறுப்பினர் இரா.செந்தில் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சி.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் இரா.சிசுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜூலை 26 முதல் ஆகஸ்டு 4-ஆம் தேதி வரையில், தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நடத்துவது. இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை,பேச்சுப் போட்டிகள் நடத்துவது. தினசரி புத்தகத் திருவிழாவில் இலக்கியச் சந்திப்பு, கலை நிகழ்வுகள் நடத்துவது. சொற்பொழிவாற்ற சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்களை பங்கேற்ப வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
ஜூலை 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில், உயர் கல்வித் துறை அமைச்சர் விழாவைத் தொடங்கிவைக்கிறார். இதையொட்டி, 100 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தொழிலதிபர் டி.என்.சி.மணிவண்ணன், செயலாளராக இரா.செந்தில், பொருளாளராக எம்.கார்த்திகேயன் ஆகியோரும், 15 துணைத் தலைவர்களும், 15 துணைச் செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்வேறு பணிகளை மேற்கொள்ள 12 உபக்குழுக்கள் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. இக் கூட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தொல்லியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலத் துறைகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.