நலத் திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ஏஐடியூசியின் தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் குழந்தைவேலு தலைமை வகித்தார். ஏஐடியூசி-இன் மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், செயலாளர் கே.மணி, செயலாளர் ஆர்.சுதர்சனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்டடத் தொழிலாளர் குழந்தையின் கல்வி உரிமையைப் பாதிக்காத வகையில் தில்லி அரசு வழங்குவதை போல, தமிழக அரசும் நிதியுதவி வழங்க வேண்டும். கட்டத் தொழிலாளிக்கான நலத் திட்ட உதவிகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.