டாஸ்மாக் விற்பனையாளரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையர்களை பிடித்த காவலர்களுக்கு கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா பாராட்டுத் தெரிவித்தார்.
அரூர் வட்டம், நரிப்பள்ளி அருகே டாஸ்மாக் விற்பனையாளர் மகரஜோதியை துப்பாக்கியால் சுட்டு ரூ. 80 ஆயிரம் பணத்தை இருவர் பறித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தீர்த்தமலை - நரிப்பள்ளி சாலையில், தெத்து முனியப்பன் கோயில் அருகே சந்தேகமான முறையில் வந்த இருவரை காவல்துறையினர் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ஊத்தங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன் (32), பரதன் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும், துப்பாக்கியால் சுட்டு டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தது உறுதியானது. இதையடுத்து, இந்த நபர்களை பிடித்த அரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில், ஊர்க்காவல்படை வீரர் வடிவேல் ஆகியோரை பாராட்டி கோவை ஐ.ஜி. கே.பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பரிசுத் தொகையை வழங்கினர்.
இதில், தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார், அரூர் டி.எஸ்.பி. ஏ.சி.செல்லப்பாண்டியன், காவல் ஆய்வாளர் முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.