தருமபுரி மாவட்டத்தில் 3,250 ஹெக்டரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் ஆ.இளங்கோவன் தெரிவித்தார்.
தருமபுரி அருகே குப்பூர் மற்றும் குண்டல்பட்டியில், சொட்டு நீர்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்யும் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் விவசாயிகளிடம் கூறியது: தருமபுரி மாவட்டத்தில், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில், நிகழாண்டு 3,250 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கென ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நிதி மானியத்துடன் 2,381 ஹெக்டர் சாகுபடி செய்து மொத்தம் 2641 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மாவட்டத்தில் பருவமழை குறைந்துள்ள நிலையில், விவசாயிகள் தங்களிடம் இருக்கும் நீரைச் சிக்கனமான முறையில் பயன்படுத்தி மகசூலை இருமடங்காக்க, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைப்பதனால் பயிரின் வேர் பகுதியில் நீர் மற்றும் நீரில் கரையும் உரம் கிடைப்பதனால் 40 முதல் 70 விழுக்காடு வரை நீரைச் சேமிப்பதுடன் கூடுதலாக 20 முதல் 50 விழுக்காடு வரை மகசூல் பெறலாம். சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் கிடைக்கிறது. எனவே, இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என்றார்.
ஆய்வின் போது, வேளாண் துணை இயக்குநர் சேகர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர் ச.மணிராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்)அமுதவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.