கடத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் நிலம் பத்திரப் பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட இதரப் பணிகளுக்காக லஞ்சம் பெறுவதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. சுப்பிரமணியன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர், கடத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையானது மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் நடைபெற்றது. இந்தச் சோதனையில், பணம் மற்றும் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.