தருமபுரி அருகே விபத்துக்குள்ளான வேனில் இருந்த புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து துரைசிங் (30) என்பவர் வேனில் தருமபுரி நோக்கி வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தார். காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி அருகே வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனை ஓட்டி வந்த துரைசிங் காயமடைந்தார்.
தகவலின் பேரில், காரிமங்கலம் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று காயமடைந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வேனை போலீஸார் மீட்டபோது, அதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.