சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, கோட்டூர் மலை கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விவரம்: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்குள்பட்ட கோட்டூர் மலை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இங்கு 700 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். மலைப் பகுதியில் வசிக்கும் எங்களுக்கு சாலை வசதி, சீரான குடிநீர் வசதி இல்லை. இதனால், பள்ளிக் குழந்தைகள், முதியோர் என பல்வேறு தரப்பினரும் சுமார் 5 முதல் 6 கி.மீ. தொலைவு மலை அடிவாரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. உடல் நலக்குறைவு ஏற்படுவோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். மேலும், கல்வி பயில்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குச் சென்று வர இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறோம். எங்களது கிராமத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, நீண்ட காலமாக கோரிக்கு விடுத்து வருகிறோம்.
இருப்பினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களது சிரமத்தை போக்கிட, எங்களது மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தரவும், அடிப்படை வசதிகள் செய்துதரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.