அரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 2 சுயேச்சை வேட்பாளர்கள் வியாழக்கிழமை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-இல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ஆம் தேதியாகும்.
அரூர் (தனி) தொகுதிக்கான வேட்பு மனுக்களை அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கான வேட்பு மனுக்களை பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பூசாரி மகன் பார்த்திபன் (49), குடுமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கருத்தோவியம் (30) ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக தங்களது வேட்பு மனுக்களை அரூர் சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.புண்ணியக்கோட்டியிடம் தாக்கல் செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வியாழக்கிழமை வரை யாரும் வேட்பு மனு தாக்கல்
செய்யவில்லை.