தருமபுரி மாவட்டத்தில் டிஜிட்டல் சிக்னல் வழியாக மட்டுமே கேபிள் தொலைக்காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், டிஜிட்டல் ஒளிபரப்புக்கான விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள், உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு டிஜிட்டல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995 சட்டப்பிரிவு 4 (3)-இன் படி, உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனலாக் சிக்னலை முற்றிலும் தவிர்த்து, டிஜிட்டல் சிக்னலாக மட்டுமே ஒளிபரப்ப வேண்டும். டிஜிட்டல் முறையில் சிக்னல் வழங்காமல் அனலாக் முறையில் சிக்னல் வழங்குவோரின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், கேபிள் டிவி சட்ட விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே என மிக கடுமையாக தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முறைகேடாக அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்து வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட
உள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் ஒளிபரப்பை மேற்கொள்ள வேண்டும்.