தருமபுரி

தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

DIN

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அனைத்து  வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒடசல்பட்டி கூட்டுச் சாலையில் திமுக தேர்தல் பிரசாரம், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:  அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து,  விவசாயக் கடன்கள் ரத்து, ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு,  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய இலவச பயணச் சீட்டு, மகளிருக்கு வங்கிக் கடனுதவி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாக புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு புதிய ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் நிச்சயம் நிறைவேற்றப்படும்.  அதேபோல், தருமபுரி-அரூர் சாலை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும்.  பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பாடி அணைக்கட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.  தென்பெண்ணை ஆற்றில் மழைக் காலங்களில் வீணாக ஓடும் உபரி நீரைப் பயன்படுத்தும் வகையில், செனாக்கல் தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்படும். 
அதிமுக ஆட்சி கவிழும்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள், அதிமுகவுக்கு எதிராக சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.  இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.  இந்த தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு கட்டாயம் கவிழும்.
திமுக வன்முறையான கட்சி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசும் போது,  பாட்டாளி மக்கள் கட்சிதான் வன்முறையில் ஈடுபடும் கட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியர் சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மேம்பாடு அடைவதற்காக, மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, அந்த சமுதாய மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர். எனவே, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர் சமுதாய மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார் அவர்.
முன்னதாக,  திமுக கூட்டணியின் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார்,  இடைத் தேர்தல் வேட்பாளர்கள் ஆ.மணி (பாப்பிரெட்டிப்பட்டி), செ.கிருஷ்ணகுமார் (அரூர்) ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூ. கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT