ஊத்தங்கரையை அடுத்த கதவனி (அருணபதி) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம். சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை என். ஜோதி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அன்னை சத்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜி. மாதேஸ்வரி, நாசர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர். வசந்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கதவனி, புதூர், மயிலாடும்பாறை, எம்.ஜி.ஆர். நகர், கண்ணன் வட்டம், சமத்துவபுரம், கருமாண்டபதி, பெரியா கவுண்டனூர், கதவனிகோட்டை மேடு, அருணபதி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், இளைஞர்களும் கலந்து கொண்டு பள்ளிக்குத் தேவையான பீரோ, டேபிள், சேர், குடம், குத்துவிளக்கு, பல்வேறு தேச தலைவர்களின் புகைப்படங்களை என ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பொருள்களை பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.