தருமபுரி உழவர் சந்தையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், அரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி ஆகியோரை ஆதரித்து மார்ச் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் தருமபுரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து, தருமபுரியில் தங்கிய ஸ்டாலின், சனிக்கிழமை காலை தருமபுரி உழவர் சந்தைக்குச் சென்று தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அங்குள்ள அனைத்து கடைகளிலும் வியாபாரிகள், வாடிக்கையாளர், சாலையோரக் கடை வைத்திருப்போரிடம் வாக்குச் சேகரித்தார். இதைத் தொடந்து, உழவர் சந்தைப் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்துக்குச் சென்ற அவர், அங்கு நிர்வாகிகளுடன் காபி அருந்தினார்.
இதையடுத்து, தருமபுரியில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர், குமாரசாமிபேட்டையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் உள்ள தி.மு.க. தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சின்னசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து, அங்கிருந்து அரூர் புறப்பட்டுச் சென்று அங்கு பொதுக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.
அப்போது, தருமபுரி மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ., தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.என்.வி. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.