ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் அவ்வப்போது சாலைகளைக் கடந்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி வனப் பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால், அங்குள்ள வனப் பகுதிகளில் சுற்றித் திரியும் யானைகள் இடம் பெயர்ந்து ஒகேனக்கல் பகுதிகளில் கூட்டமாக முகாமிட்டுள்ளன. தண்ணீருக்காக அவ்வப்போது பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையைக் கடந்து செல்கிறது. மேலும், சாலையோரத்தில் பல மணி நேரங்கள் நின்று ஓய்வெடுக்கிறது. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தண்ணீருக்காக வனத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் சுகாதாரமான குடிநீர் நிரப்பப்படாமலும், தொட்டிகளை முறையாக பராமரிக்கப்படாமலும் உள்ளன. இதனால், கடந்த காலங்களில் யானைகள் உயிரிழந்துள்ளன.
இதனிடையே வறட்சியை சமாளிக்க வனத் துறை சார்பில் சின்னாறு பகுதிகளில் இரு இடங்களில் உள்ள தொட்டிகளிலும், கோடுப்பட்டி பகுதியிலுள்ள இரு தொட்டிகளிலும் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.