போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரனுடன் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் அருகேயுள்ள ஆமணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(85). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பிழைப்பு நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும் நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரியும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இவரது மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மனமுடைந்த சாமிநாதன் திங்கள்கிழமை தனது பேரன் தட்சிணாமூர்த்தியை (6) அழைத்துக்கொண்டு போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீதும், பேரன் மீதும் ஊற்றினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸார், முதியவர் சாமிநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.