இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, அதிபர் சிறீசேனா பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயல் தீவிரமடைந்துவரும் நிலையில், தமிழக அரசின் சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே, ஒக்கி, தானே புயல்களால் பாதிக்கப்பட்ட போது மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய நிலையில், கடலூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்தார். அதற்கு காரணமான அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடாது என்ற நோக்கில், மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து வருகிறோம். பாஜக ஒரு வலிமையான கட்சி கிடையாது. ஆனால், ஆபத்தான கட்சி என்பதால், அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்கிறோம்.
இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. தோழமைக் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். மக்களவைத் தேர்தலுடன் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்ந்து நடக்க வாய்ப்பு உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் மாபெரும் வெற்றி பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது. இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அதிபர் சிறீசேனா, ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார்.