கிருஷ்ணகிரி

ஒசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி கடத்தப்பட்டு  கொலை

DIN

ஒசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி கடத்தப்பட்டு, கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக, பெண்ணின் தந்தை உள்பட 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒசூர் அருகே உள்ள வெங்கடேஷ்புரம் அருகே சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா மகன் நந்தீஸ் (25),  ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தார்.  அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகள் சுவாதி (21), தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார். 
ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்,  அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு,  பின் அது காதலாக மலர்ந்தது.  இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில்,  இவர்களிருவரும் கடந்த ஆக. 15-ஆம் தேதி சூளகிரி திம்மராயசாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டு,  ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ராம் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனராம். 
இந் நிலையில், கடந்த நவ. 10-ஆம் தேதி இரவு புனுகன்தொட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நந்தீசும், சுவாதியும் பிறகு வீடு திரும்பவில்லையாம். அவர்களை நந்தீஸின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால்,  ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில், காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில்,  கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் அருவி அருகில் உள்ள காவிரி ஆற்றில் ஓர் இளைஞரும், இளம்பெண் ஒருவரும் கம்பியால் கட்டப்பட்ட நிலையில், சடலமாகக் கிடப்பதாக பெலகவாடி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை  தகவல் கிடைத்தது.  அதன் பேரில், பெலகவாடி காவல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீஸார் அங்கு சென்று 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,  அவர்கள் ஒசூரைச் சேர்ந்த நந்தீஸ், சுவாதி எனத் தெரியவந்தது.  இதுகுறித்து கர்நாடக போலீஸார், ஒசூர் நகரப் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவின் பேரில்,  ஒசூர் டி.எஸ்.பி. மீனாட்சி,  நகர காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதில்,  நந்தீஸ்-சுவாதி ஜோடி திருமணத்தை  விரும்பாத பெண்ணின் குடும்பத்தினர்,  அவர்களை கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் வீசியது தெரிய வந்ததாம்.
இதையடுத்து,  பெண்ணின் தந்தை சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (40),  பெண்ணின் பெரியப்பா வெங்கடேஷ் (43), உறவினர் புனுகன்தொட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய 3 பேரிடம் ஒசூர் போலீஸாரும், பெலகவாடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும், இது தொடர்பாக பெண்ணின் மற்றொரு பெரியப்பா சூடுகொண்டப்பள்ளி அஸ்வதப்பா (45), உறவினர் வெங்கட்ராஜ் (25), பாலவனப்பள்ளியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சாமிநாதன் (30) ஆகிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT