கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலரும், மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு அலுவலருமான ஆர்.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர், அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் முன்னிலை வகித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலரும், மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு அலுவலருமான ஆர்.வெங்கடேசன் பேசியது: அரசு பல்வேறு நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை முறையாக வளர்ச்சிப் பணிக்கு செலவிட வேண்டும். டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்கள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய்த் தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசு வழங்கும் திட்டங்கள், மானியங்கள் முழுமையாக விவசாயிகளை சென்றடைய வேண்டும். குறிப்பாக, விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். ஒவ்வொரு அரசுத் துறை அலுவலர்களும் தங்களது துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் செயல்படும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்கு சென்று, அங்கு தயாரிக்கப்படும் பால்கோவா, நெய், குல்பி ஆகியவற்றை உற்பத்தி செய்யுமிடத்தை ஆய்வு செய்தார். பச்சிகானப்பள்ள ஊராட்சியில் இருளர்களுக்கு கட்டப்படும் குடியிருப்புகளையும், திம்மாபுரம் பழப் பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அவர் ஆய்வு செய்தார்.