லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 4 பேர் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (44). இவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சனிக்கிழமை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அவருடன், அவரது மனைவி காந்திமதி (38), பெங்களூரு ஆடுகோடி விநாயகர் நகர் முதலாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த செல்வத்தின் அக்காள் மகன் சரவணன் (26) ஆகியோர் உடன் சென்றனர். ஆம்புலன்ஸை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள அன்னநல்லூரைச் சேர்ந்த ஜெயசூர்யா (23) என்பவர் ஓட்டிச் சென்றார். இவரது உறவினர் மதன்குமார் (22) என்பவரும் மாற்று ஓட்டுநராக ஆம்புலன்ஸில் சென்றார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வழியாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இதில் செல்வம், அவரது மனைவி காந்திமதி, உறவினர் சரவணன், மாற்று ஓட்டுநர் மதன்குமார் ஆகிய 4 பேரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். ஓட்டுநர் ஜெயசூர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒசூர் டிஎஸ்பி மீனாட்சி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காயமடைந்த ஜெயசூர்யா ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விபத்து குறித்து ஒசூர் அட்கோ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com