கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ1.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 192 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டத்துறை அலுவலர்களுக்கு வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளின் வாரிசுதாரர்களான அருளாளம் கிராமத்தைச் சேர்ந்த கௌரம்மாவுக்கு ரூ.ஒரு லட்சம், நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணிக்கு ரூ.17 ஆயிரம், தேவீரப்பள்ளியைச் சேர்ந்த முருகனுக்கு ரூ.17 ஆயிரம், மாணவி ரேவதிக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1,000 என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காசோலைகளாக அவர் வழங்கினார். அப்போது, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.