கட்டடம் கட்டுவதற்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஊராட்சி முன்னாள் செயலருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி வீரப்ப நகர், 4-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அழகு சுந்தரம். இவர், கட்டடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். அப்போது, கிருஷ்ணகிரி வட்டம், அகரிப்பள்ளி ஊராட்சி எழுத்தராக இருந்த அறிவழகன், கட்டடம் கட்ட அனுமதி வழங்க ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என கூறினார்.
இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அழகு சுந்தரம் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்சம் ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி, அழகுசுந்தரம், அறிவழகனிடம் லஞ்சம் அளித்தார். அப்போது, மறைந்திருந்த போலீஸார், அறிவழகனை 2011-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு, கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பாலசுப்பிரமணியன், திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தார். அதில் அறிவழகனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.