12 ஆண்டுகளாக மற்றவர்களின் துணையுடன் நடந்து வந்த பெண்ணுக்கு இருமூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து பென்னாகரம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே சத்திரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மனைவி ரேவதி (50) என்பவர், கடந்த 12 ஆண்டுகளாக வெளியுலகத்தைக் காண முடியாமல் மற்றவர்களின் துணையுடன் நடந்து வந்தார்.
பென்னாகரம் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்வது அறிந்து ரேவதியின் உறவினர்கள் அவரைக் கடந்த ஜூன் மாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு ரேவதிக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தமிழகத்திலேயே அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் இரு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ரேவதிக்கு மேற்கொள்ளப்பட்டது.
எலும்புமுறிவு மருத்துவர் சிவகுமார செந்தில்முருகன் தலைமையில் எலும்புமுறிவு மருத்துவர் ரவி, மயக்கவியல் மருத்துவர் லாரன்ஸ், பிசியோதெரபிஸ்டு, லாவண்யா செவிலியர்கள் மகரஜோதி மற்றும் சின்னசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.
பின்னர் கடந்த இரண்டு மாதமாக மருத்துவர்களின் நேரடி பார்வையில் இருந்த ரேவதி, தற்போது ஊன்றுகோல் உதவியுடன் தன்னிச்சையாக நடந்து வருகிறார். சாதனை படைத்த அரசு மருத்துவர்களை சக மருத்துவர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.