கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அரசு கல்லூரி மாணவியருக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் செப். 18-ஆம் தேதி முதல் 3 நாள்கள், பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையைச் சேர்ந்த 50 மாணவியருக்கு, குறுகிய கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
வரலாற்றை எழுத ஆதாரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அந்த ஆதாரங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கல்வெட்டுக்களை கொண்டு வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது, புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் எடுத்துரைத்தார்.
மேலும், தமிழி என்று அழைக்கப்படும் தொல் தமிழ் வரிவடிவ எழுத்துகளை எழுத, படிக்க பயிற்சி அளித்து, அந்த எழுத்துகள் ஒவ்வொரு நூற்றாண்டாக எவ்வாறு மாற்றமடைந்து வந்து, தற்போதைய தமிழ் எழுத்துகளாக ஆனது என்பதை உரிய உதாரணங்களுடன் விளக்கினார்.
பயிற்சியின் இறுதி நாளான வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கல்வெட்டில் மை ஒற்றி படியெடுத்து, கல்வெட்டில் உள்ள எழுத்துகளை படித்து பொருளை அறிந்து கொள்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் சான்றிதழ்களை வழங்கினார். இந்த பயிற்சியை அரசு அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வக்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.