காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிரதானஅருவி முற்றிலும் சேதமடைந்துள்ளதால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாகியும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை நீடிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் பாதை ,பிரதான அருவி, அருவியின் பகுதியில் உள்ள பாதுகாப்பு இரும்புக் கம்பிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்நிலையில் கடந்த ஒருமாத காலமாக காவிரி ஆற்றில் நீர்வரத்துக் குறைந்து வந்த நிலையில், பிரதான அருவியை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து மந்தகதியில் நடைபெற்று வருகின்றன.
இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோர் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆபத்தான இடங்களில் குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதுவரை மாவட்டநிர்வாகம் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யவில்லை.
இதுகுறித்து பென்னாகரம் வட்டாட் சியர் பிரசன்னமூர்த்தி கூறியதாவது: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சேதமடைந்த பிரதான அருவி, அருவிக்கு செல்லும் பாதை, பாதுகாப்பு கம்பிகளை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணிகள் முற்றிலும் நிறைவடைவதற்கு இன்னமும் 5 நாள்களுக்கு மேலாகும் என்றார்.
இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனிடம் கேட்ட போது, ஒகேனக்கல்லில் சேதமடைந்துள்ள பிரதான அருவியை சீரமைக்க ஒன்றியக்குழு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பிரதானஅருவி, பெண்கள்அருவிகள் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்து, மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு பிறகு பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்றார்.
ஒகேனக்கல் பிரதான அருவியை சீரமைக்கும் பணியானது கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.