அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் எனக் கோரி, மக்கள் பாதை அமைப்பினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் பாதை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் சமூக மாற்றத்துக்காக செயல்பட்டு வரும் அமைப்பாக மக்கள் பாதை அமைப்பு உள்ளது. தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அனைவரும், தங்களின் பெயரையும், முன்னெழுத்தையும் தமிழ்மொழியிலேயே இட வேண்டும் என வலியுறுத்தி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அரசுப் பணியாளர்கள் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்று வெளியிடப்பட்ட அரசாணையை மதிக்காத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. எனவே, இனி அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள் அனைத்தும் தமிழிலேயே அமைய ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.