ஊத்தங்கரை தொகுதிக்குள்பட்ட மிட்டப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 34 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 29 லட்சம் மதிப்பில் 2,174 திட்டப்பணிகளுக்கு மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ. 10 லட்சம் மதிப்பில் அனுமந்தீஸ்வரர் ஆலயம் அருகில் பக்தர்கள் குளியலறை, சுகாதார வளாகக் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, குப்பநத்தம், கொட்டராம்பட்டி, செங்கம்பட்டி ஆகிய கிராமங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் அமைச்சர் பேசியது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஊத்தங்கரை ஒன்றியத்தில் மட்டும் 2,174 பணிகள் ரூ. 5 கோடியே 29 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு, விரைவாக பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும். தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு, மாடுகள், புறக்கடை கோழிகள் வழங்கியதால் பெண்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள், பயிர்க்கடன், வேளாண்மை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அம்மா மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் 25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பில் உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குப்பநத்தம், மிட்டப்பள்ளி, கோடாலவலசை, கொட்டாரபட்டி, ஆனந்தூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் கால்வாய், மயானம், போக்குவரத்து வசதி, அங்கன்வாடி மையங்கள், தேவை குறித்து மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர், அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ராதாகிருஷ்ணன், சார்-பதிவாளர்கள் சரவணன், ஜனார்த்தனன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.இ.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சாகுல் அமீது, தென்னரசு, கிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் தேவேந்திரன், ஆர்.செல்வம், எல்.எல்.ராமு, பி.கே.சிவானந்தம், சுப்பிரமணி, அட்மா தலைவர் சேட்டுகுமார், வட்டாட்சியர் மாரிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், சண்முகம் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.