நாகரசம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மிதிவண்டி பேரணி நடத்தினர் .
போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி அருகேயுள்ள நாகரசம்பட்டி பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்றுள்ள மாணவர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடத்தினர்.
இதில் பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த பாதகைகளை ஏந்தியவாறு, துண்டுப் பிரசுரங்கள், துணிப்பைகளை வழங்கி பொதுமக்கள் மற்றும் கடைகளில் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நாகரசம்பட்டி அரசுப் பள்ளி முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி செல்லம்பட்டி வழியாக வீரமலை என்.எஸ்.எஸ். முகாம் நடைபெறும் இடம் வரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் வீரமலை பள்ளித் தலைமையாசிரியர் குமரேசன், ஆசிரியர்கள் ஐயப்பன்,அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பெரமன் செய்திருந்தார். நிறைவில் உதவித் திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.