கிருஷ்ணகிரி அருகே மின்னல் பாய்ந்ததில் பெண், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடை அருகேயுள்ள நாரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயி. இவரது மனைவி ஸ்ரீதேவி(35). இவர்களுக்கு சந்தோஷ் (17), பிரியா(15) என இரு குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீதேவி தனது உறவினர்களுடன், தங்களது நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதையடுத்து, அங்கிருந்து வெளியேறிய ஸ்ரீதேவி மற்றும் உறவினர்கள், அருகில் இருந்த கொட்டகையில் மழைக்காக ஒதுங்கினர். அப்போது, மின்னல் தாக்கியதில் ஸ்ரீதேவி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மகாராஜாகடை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.