ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி ஏரி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி ஏரி அருகே அரூரிலிருந்து ஊத்தங்கரை நோக்கி வியாழக்கிழமை காலை தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சாலையின் வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 12 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லிபி (16), ஈச்சம்பாடி அபிநயா (16), அனுமன்தீர்த்தம் சுவேதா(16), ஆகிய பள்ளி மாணவிகளும் இதில் அடங்குவர். பாவக்கல் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவி கெளசல்யா (18) பலத்த காயத்துடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
,ஊத்தங்கரையைச் சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் (28), குமாரம்பட்டியைச் சேர்ந்த சாந்தி(40), சிவக்குமார்(50), பறையப்பட்டி கூட்டு ரோட்டைச் சேர்ந்த அல்லி (40) உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.