பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற, விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவாக சாகுபடி நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு எதிர்பார்த்த மகசூல் பெறும் நோக்கத்துக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரத்தை 3 தவணையாக வழங்க ஆணை யிடப்பட்டுள்ளது.
இதன் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவியை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி நிதி மாற்றம் செய்யும் நோக்கத்துடன் விரைந்து செயல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியான விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நில ஆவணங்கள் போன்ற தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.