ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட ஒசூர் அருகேயுள்ள பெலத்தூர் தாலுகா, சூடாபுரம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் அசோக்குமார் (21). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில் தன்னுடன் படிக்கும் நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவையில் இருந்து மொடக்குறிச்சியை அடுத்த சாவடிப்பாளையம் பகுதிக்கு சனிக்கிழமை இரவு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நட்டாற்றீஸ்வரன் கோயில் அருகே உள்ள காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை குளித்து கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத அசோக்குமார், ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கினார். இதையடுத்து அவரை நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.