மத்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்தூர் மூக்காகவுண்டனூரைச் சேர்ந்த நடராஜ் மகன் சக்திவேலுக்குச் சொந்தமான கரும்பு தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கரும்பு உடைத்த அதே பகுதியைச் சேர்ந்த மாணவரை சக்திவேல் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவரின் தந்தை ஜெயவேல் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சக்திவேலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்த நிலையில், சக்திவேலைத் தாக்கிய ஜெயவேல் அவரது நண்பர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை சக்திவேலின் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஞாயிற்றுகிழமை இரவு மத்தூர் பேருந்து நிலையத்தில் திடீரென கூடிய பொதுமக்கள் பேருந்து நிலையத்தின் மேற்கூரைகளை சேதப்படுத்தி பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், இரு தரப்பினரையும் நேரில் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத், துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.